Thursday, November 21, 2013

அரிசியை முற்றிலுமாக தவிர்ப்பது ஆரோக்கியமானதா?

ஓட்ஸ் மற்றும் கோதுமை கூட, பட்டை தீட்டப்பட்டிருந்தால் அதன் மூலம் சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம். எதைச் சாப்பிடுவதென்றாலும், அது சிவப்பு அரிசி, ஓட்ஸ் தவிடு நீக்கப்படாத முழு தானியமாக இருப்பது நல்லது 
1. மரபு ரீதியாக மற்றும் உணவுமுறை மூலமாக நீரிழிவு நோய் வருவதாகக் கூறப்படுகிறது. இதில் எதன் மூலமாக இந்நோய் அதிகம் வருகிறது?

ஒரு மனிதனின் வாழ்க்கைமுறையும், அவனது சுற்றுப் புறமும் இரண்டாம் நிலை நீரிழிவு நோயில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவன் தனது பெற்றோரின் மரபணு 
மூலமாக பெறுவதை விடவும், அவர்களிடமிருந்து வாழ்க்கைமுறை பாடத்தை அதிகமாகக் கற்றுக் கொள்கிறான். அவர்களது ஊட்டச்சத்துகளற்ற தவறான உணவு பழக்க வழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளற்ற வாழ்க்கைமுறை, அவனிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. 
எனவே, பெற்றோர் நல் உதாரணமாய் இருந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கொண்டிருந்தால், அவர்களது சந்ததியும் நீரிழிவு நோய் பாதிப்பு இல்லாமல் ஆரோக்கிய வாழ்வு வாழும். 
2. ஆங்கில மருத்துவம் போலவே அக்குபஞ்சர் போன்ற முறைகளையும், நீரிழிவு பிரச்னைக்காக மக்கள் நாடும் நிலை உள்ளது. இது சரியானதா? 
அக்குபஞ்சர் முறையில் நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுவதாகத் தெரியவந்துள்ளது. ஆனால் இதற்கு, மேலும் அறிவியல் சான்றுகள் தேவைப்படுகின்றன. அக்குபஞ்சர் முறையில் நரம்பு தொடர்பான வலிகள், நாள்பட்ட வலிகள் போன்றவைக்கு தீர்வு கிடைக்கலாம். 
3. இரண்டாம் நிலை நீரிழிவு என்பது என்ன? அது எப்படி வருகிறது? 
இரண்டாம் நிலை நீரிழிவு நோயாளிகளின் உடலில் இன்சுலின் சுரப்பு குறிப்பிட்ட அளவில் இருக்கும். ஆனால், அந்த இன்சுலினும் சரியாக வேலை செய்யும் என்று சொல்ல முடியாது. இவ்வகையான இரண்டாம் நிலை நீரிழிவு பெரியவர்களுக்கே வருகிறது. அத்துடன் ஒபீசிட்டி எனப்படும் அதிக எடை உள்ளவர்களையும் அதிகம் தாக்குகிறது. டயட், உடற்பயிற்சி மற்றும் வாய் வழியாக மருந்துகள் உட்கொள்வதன் மூலம் இவ்வகை நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். 
4. ஜுவினைல் டயாபடீஸ் எனப்படும் குழந்தைப் பருவத்தில் வரும் சர்க்கரைத் தாக்கு தற்போது எந்நிலையில் உள்ளது? 
ஜுவினைல் டயாபட்டீஸ் தற்போது டைப் 1 டயாபட்டீஸ் அல்லது இன்சுலின் சார்ந்த டயாபட்டீஸ் எனப்படுகிறது. பெரும்பாலும், 20 வயதுக்கு உட்பட்டோரே பாதிக்கப் 
பட்டாலும் எந்த வயதினரும் இவ்வகை நீரிழிவால் பாதிக்கப்படலாம். 
5. காஸ்டஸ் பிக்டஸ் என்னும் மூலிகைச் செடியின் இலைகளை, தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் போதும் இன்சுலின் ஊசி போடும் தேவையிருக்காது என சொல்கிறார்களே? இது உண்மையானதா? 
இதற்கு எந்த சான்றுகளும் இல்லை. 
6. மஞ்சள் காமாலை, அம்மை, போலியோ போன்றவற்றுக்கு தடுப்பு மருந்துகளை குழந்தைப் பருவத்திலேயே கொடுப்பது போல் நீரிழிவுக்கும் தடுப்பு மருந்துகள் வந்துள்ளனவா? அல்லது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றனவா? 
இன்றைய நிலை வரை நீரிழிவு நோய்க்கு எந்த தடுப்பு மருந்துகளும் இல்லை. 
7. பச்சரிசியை விட புழுங்கல் அரிசி நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது என்கிறார்களே?
முன்பெல்லாம் கைக்குத்தல் அரிசி உணவைத்தான் உண்டு வந்தார்கள். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில், பச்சரிசியோ அரை வேக்காட்டு புழுங்கல் அரிசியோ எதுவானாலும் இன்று பாலிஷ் செய்யப்பட்டே கிடைக்கிறது. இந்த பாலிஷ் செய்யப்பட்ட அரிசியில் அதிலுள்ள நார்ச்சத்து மட்டுமில்லாமல் அதில் உள்ள அனைத்து சத்துக்களும் நீக்கப்பட்டு விடுகின்றன. 
இத்தகைய அரிசியால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. எங்களது ‘மோகன்’ஸ் டயாபட்டீஸ் சென்டரில் உடலில் சர்க்கரையை அதிகரிக்காத புதிய வகையான ஸ்பெஷல் பிரவுன் அரிசி மற்றும் வெள்ளை அரிசி உருவாக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த அரிசி எங்களது நிறுவனத்தில் கிடைக்கும். 
8. ‘குறைவாகச் சாப்பிடுங்கள்; கூடுதலாக வேலை செய்யுங்கள்’ என்ற கூற்று முற்றிலும் மாறி உடல் உழைப்பு குறைந்து வரும் நிலையில், சர்க்கரை நோய் வராமல் தடுக்க, பின்பற்ற வேண்டிய உணவுமுறைகள் யாது? 
குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடாது. அதிகமான காய்கறிகளுடன் கூடிய மிதமான கார்போஹைட்ரேட் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட உணவு வகைகளே, சர்க்கரை வராமல் தடுக்கும். 
நீரிழிவு நோயாளிகளுக்கும் இதுவே ஏற்றது. இந்தநோயாளிகளுக்கு சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் இருந்தால், சில வகைப் பழங்களையும் சாப்பிடலாம். சத்துக்கள் நிறைந்த உணவுப்பழக்கத்தால் நீரிழிவு மட்டுமல்லாமல், ‘ஹைபர்டென்ஷன்’ எனப்படும் உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு சேர்தல், வளர்சிதை மாற்றம் மற்றும் உடல்பருமன் போன்றவற்றிலிருந்து தப்பலாம். 
9. ‘கேட்ஜெட்டுகளும் குழந்தைகளும்’ என்ற இன்றைய நிலையில், விளையாட்டு, நடனம் போன்ற உடல் உழைப்பு குழந்தைகளுக்கும் குறைந்து வருகிறது. இந்நிலையில், அவர்களுக்கான உணவு முறையில் மாற்றம் அவசியமா? 
‘டிவி’ பார்த்தல், மொபைல் போன் மற்றும் ஐபாட்களில் விளையாடுவது உள்ளிட்ட அனைத்து கேட்ஜெட்டுகளால் குழந்தைகள் அதிக எடை மற்றும் ஓபிசிட்டியால் பாதிக்கப்படுகின்றனர். 
பெரும்பாலான குழந்தைகள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ‘ஜங்க் புட்’களை அதிகம் சாப்பிடுவதாலும், செயற்கை இனிப்புகளாலான பானங்கள், சிப்ஸ், பீட்சா, பர்கர் போன்றவற்றை அதிகம் உண்பதால் சிக்கல் உண்டாகிறது. 
வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளை மட்டுமே உண்டு, வெளிஅரங்க விளையாட்டுகளில் ஈடுபட்டு வந்தாலே நோய் அண்டாது. 
10. இன்றைய இளம்பெண்கள் ‘ஜீரோ சைஸ்’ மோகத்தில் உடலை வருத்திக் கொள்வது நல்ல விஷயமா? உண்மையில் ‘ஜீரோ சைஸ்’ ஆரோக்கியமானதா? 
‘ஜீரோ சைஸ்’ என்பது ஒல்லியான (ஸ்லிம் பிகர்) உடல்வாகை பேணுவதுதான். இது ஆரோக்கியமான அணுகுமுறையல்ல என்பது பலருக்கும் தெரிவதில்லை. முறையான பயிற்சியாளரின் ஆலோசனையின் பேரிலும், சரியான உணவு முறையாலும் ஒல்லியான உடல்வாகைப் பெற முயற்சிக்கலாம். 
11. பலரும் இன்று ஓட்ஸ், கோதுமை சப்பாத்தி என, மாறி வருகிறார்கள். இப்படி அரிசியை முற்றிலுமாகத் தவிர்ப்பது ஆரோக்கியமானதா? 
ஓட்ஸ் மற்றும் கோதுமை கூட பட்டை தீட்டப்பட்டுஇருந்தால் அதன் மூலம் சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம். எதைச் சாப்பிடுவதென்றாலும், அது சிவப்பு அரிசி, முழு கோதுமை ரொட்டி அல்லது ஓட்ஸ் தவிடு நீக்கப்படாத முழு தானியமாக இருப்பது நல்லது. 
12. கலோரிகளைக் கூட்டும் விருந்து என்பது, எப்போதாவது என்பது போய், இப்போது ‘வீக் எண்ட் பார்ட்டிகள்’ இளைஞர்களிடையே அதிகரித்து வருகின்றனவே? இதனால் பாதிப்பு உண்டா? 
ஆம். கண்டிப்பாக இத்தகைய வீக் எண்ட் விருந்துகளால் சிக்கல்தான். இவை, சர்க்கரை அளவை உயர்த்த தவறுவதில்லை. 
காரணம், இத்தகைய பார்ட்டிகளில் நொறுக்கு தீனிகளான சிப்ஸ், நாக்கோஸ் மற்றும் எண்ணெயில் பொரிக்கப்படும் ஸ்டார்ட்டர் வகை உணவுப் பண்டங்களே அதிகம் பரிமாறப்படுகின்றன. 
இதுவே, ஆரோக்கியமான, சத்தான உணவு வகைகளைக் கொண்ட சாலட்டுகள், முழு தானியங்கள், பாதாம், முந்திரி போன்ற புரதம் நிறைந்த உணவுகள் கொண்ட பார்ட்டிகள் என்றால் ஆரோக்கியமானதும் கூட. கொழுப்பும் குறையும். முன் சொன்ன முறையே என்றாலும் எப்போதாவது ஒரு முறையென்றால் சரி… வாராவாரம் என்றால் அது கூடாததுதான். 
‘சுகர் ப்ரீ’யா? உஷார்! 
சர்க்கரைக்கு மாற்றாக உபயோகிக்கப்படும், ‘சுகர் ப்ரீ’ எனப்படும் ‘அஸ்பார்டேம்’ஆல் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்படலாம் என்ற கருத்து உள்ளது. ஆனால், சுகர் ப்ரீ சாக்லேட்டுகள், ஐஸ்கிரீம், ஸ்வீட்டுகளை பிரபல கடைகளில் விற்கிறார்களே? இது சரியானதா? 
சுகர் ப்ரீ பொருட்களை, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் கண்டிப்பாகக் கொடுக்க கூடாது. இந்த சுகர் ப்ரீ பொருட்களில் கலோரிகள் அதிகம் உள்ளதால், மற்றவர்கள் கூட இதனை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது. பெரும்பாலான உணவுப் பண்டங்களில், சாதாரண சர்க்கரைக்கு பதிலாக புருக்டோஸ் உபயோகிக்கப்படுகிறது. 
சர்க்கரை அளவு கட்டுப்படாத நிலையில் உள்ளவர்கள், புருக்டோஸ் கொண்ட தின்பண்டங்களை எடுத்துக் கொள்வதால் சர்க்கரை அளவு மேலும் கூடிப்போகிறது. இத்தகைய சுகர் ப்ரீ பொருட்கள் விலை, மிக அதிகமானதும் கூட.

No comments: