'பொதுவாக உடல் பருமனை, குழந்தையின் உயரம் மற்றும் எடையைவைத்தே கூற முடியும். ஒவ்வொரு வயதுக்கும் ஒரு வளர்ச்சி அட்டவணை உண்டு. எனவே அதை முதலில் கணக்கில்கொள்ள வேண்டும்.
தவறான உணவுப்பழக்கங்கள் மற்றும் உடல் உழைப்புக் குறைவு போன்றவற்றால் உடல் பருமன் ஏற்படுகிறது. உணவைப் பொறுத்தவரை, கொழுப்பு நிறைந்த ஜங்க் ஃபுட் போன்றவற்றை முழுவதுமாக நிறுத்த வேண்டும். குளிர் பானங்கள், கடைகளில் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை முடிந்த அளவு தவிர்த்துவிட வேண்டும்.
மாறாக பச்சைக் காய்கறிகள், பழங்கள், குறிப்பாக ஆரஞ்சு போன்ற நார்ச் சத்துள்ள பழங்கள், சாலட் வகைகளை அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். உணவுக்கு முன்பே பழம், காய்கறிகளை உட்கொண்டு, பிறகு உணவை எடுத்துக்கொள்வது இன்னும் சிறந்தது. அரிசி உணவைக் குறைத்து, கோதுமையை அதிகமாகச் சேர்க்க வேண்டும்.
அசைவத்தில் மட்டனைத் தவிர்க்க வேண்டும். சிக்கன், மீன் போன்றவற்றைக்கூட, குழம்பில் சேர்க்கலாம். ஆனால், எண்ணெயில் பொரிக்கக் கூடாது. உருளைக்கிழங்கு, முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்க்க வேண்டும். கொழுப்பு எதில் இருந்தாலும் அதை அறவே தவிர்க்க வேண்டும். பாக்கெட்டுகளில் விற்கும் சிப்ஸ்தான் இந்தப் பிரச்னைக்கு முதல் எதிரி. எனவே, அதை வாங்கிக் கொடுப்பதை முதலில் நிறுத்த வேண்டும்.
இந்த வயதில் ஜிம் உடற்பயிற்சி தேவையற்றது. அவர்களுக்குப் பிடித்த விளையாட்டுக்களில் தினமும் ஓரிரு மணிநேரம் விளையாட விட்டாலே போதும். கலோரிகள் எரிக்கப்படும்.
தினமும் காலை அல்லது மாலை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லலாம். பள்ளிகள், கடைகளுக்கு நடந்தோ அல்லது மிதிவண்டியிலோ அனுப்பலாம்.
முக்கியமாக, கணினி முன் விளையாடுவது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது, ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து டிவி பார்ப்பது போன்றவற்றை முடிந்தவரை தடுக்க வேண்டும்.
வேறு ஏதேனும் நோய்களின் அறிகுறியாக அல்லது மரபணு ரீதியான காரணங்களால்கூட, திடீர் மற்றும் நீண்ட கால உடல் பருமன் வரலாம். அதற்கு, கண்காணிப்புடன் கூடிய ஆலோசனை தேவை.
ஒரு நல்ல மருத்துவரிடம் குழந்தையை அழைத்துச் சென்று, உடல் பருமனுக்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது நல்லது.
No comments:
Post a Comment