Saturday, September 28, 2013

பல்வலிக்கு முதலுதவி

திடீரென பல்வலி வந்தால், டாக்டரிடம் செல்லும் முன், வீட்டில் இருந்தபடி முதலுதவியாக என்னென்ன செய்யலாம்? 
பொதுவாக உடலில் பல இடங்களில் வலி வந்தால் மாத்திரை சாப்பிட்டால் சரியாகி விடும். ஆனால் பல்வலி உண்டாக காரணம் சொத்தை மற்றும் ஈறுநோயை உண்டாக்கும் கிருமிகள்தான். இவை பற்களில் உள்ள நரம்புகளை அழுத்துவதால்தான் வலி வருகிறது. இதற்கு காரணமான கிருமிகளை அகற்றி, பல்லை அடைத்தல் அல்லது வேர் சிகிச்சை செய்தால்தான் வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். சில நேரங்களில் உடனடியாக மருத்துவரிடம் செல்ல முடியாத போது, நீங்கள் காய்ச்சல் தலைவலிக்கு சாப்பிடும் மாத்திரையை சாப்பிடலாம். இவற்றை மருத்துவரின் கண்காணிப்பின்றி அடிக்கடி சாப்பிடக் கூடாது. வீட்டில் கிராம்பு இருந்தால் அதை வலி ஏற்படும் இடத்தில் வைக்கலாம். ஒரு சில மணி நேரங்களில் வலி குறையும். வாய்ப்புண்ணால் ஏற்படும் வலி வேறுவகையானது. இதற்கு மருந்து தேவை இல்லை. வீட்டில் உள்ள நெய் அல்லது வெண்ணெய் தடவலாம். 
வாய்ப்புண் ஒருவாரத்திற்கு மேல் சரியாகவில்லையென்றால் அல்லது வலி அதிகம் இருந்தால் டாக்டரிடம் காட்ட வேண்டும். ஈறுகளில் வீக்கம் இருந்தால் கிருமி நாசினி கலந்த "மவுத்வாஷ்' உபயோகிக்கலாம். கூட ஈறுகளை அழுத்தமாக தேய்த்து விட வேண்டும். ஒரு சில நாட்களுக்கு இதை செய்தால் ஈறுகளில் வீக்கமும், வலியும் குறையும். இப்பிரச்னைகள் அனைத்துக்கும் அதற்கான உரிய சிகிச்சை செய்யாதவரை வலி முழுமையாக நிற்காது. இவற்றை முதலுதவி போல செய்து விட்டு, பின் உரிய நேரத்தில் மருத்துவரிடம் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். 
என் தாய் வயது 57. அவருக்கு எலும்பு நோயான "ஆஸ்டியோபோரோசிஸ்' உள்ளது. அதற்கு மாத்திரை எடுக்கிறார். இதனால் பல் சிகிச்சை செய்வதில் பிரச்னை வருமா? 
நாற்பது வயதுக்கு மேற்பட்டோருக்கு குறிப்பாக பெண்களுக்கு எலும்புகளில் பிரச்னை வருவது பொதுவானது. இதற்கு சத்தான சாப்பாடு அல்லது வைட்டமின் மாத்திரை ஆகியவற்றை சாப்பிடுவர். ஆனால் ஒருசிலருக்கு "ஆஸ்டியோபோரோசிஸ்' என்ற நோய் மூலம் எலும்புகள் மிக பலவீனமாகி விடும். இதனை ஒருவகை மாத்திரைகளைக் கொண்டு சரிசெய்வர். 
இந்த குறிப்பிட்டவகை மாத்திரைகள் எலும்பு பலம்பெற உதவினாலும், பல் சிகிச்சையில் சில சிக்கல்களை உண்டாக்கும். "இம்ப்ளான்ட்' வைப்பது, பல் எடுப்பது போன்ற சிகிச்சைகளை செய்யும் போது இன்னும் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு எலும்பில் ஏற்படும் புண் ஆற மற்றவர்களைவிட அதிக நாட்களாகும். சரியான இடைவெளியில் கண்காணித்து தகுந்த வழிகளை பின்பற்ற வேண்டும். இல்லையெனில் தாடை எலும்பில் புண் ஆறாமல் கிருமிகள் பெருகி எலும்பினை அரித்துவிடும். 
இவர்களுக்கு ஈறுநோய் வருவதையும் நேரத்தில் சிகிச்சை செய்ய வேண்டும். ஈறில் இருந்து அதனை சுற்றியுள்ள எலும்புக்கு பரவிவிட்டால் சிகிச்சை செய்வது கடினமாகி விடும். இந்நிலையில் உள்ளவர்களுக்கென பிரத்யேக சிகிச்சை முறைகள் உள்ளன. இதன் மூலம் இவர்களுக்கான சிகிச்சைகள் அனைத்தையும் சரியான முறையில் செய்யலாம். எலும்பு நோய்க்கு மாத்திரை சாப்பிடுவோர், கண்டிப்பாக ஆறு மாதங்களில் இருந்து ஆண்டுக்கு ஒரு முறை பற்களை சோதனை செய்ய வேண்டும். 

No comments: